சட்டசபைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் அருணாசலபிரதேசத்துக்கு சென்றார். 37-வது மாநில தின கொண்டாட்டத்தில் பங்கேற்றார். இந்நிலையில், நேற்று அருணாசலபிரதேச சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்றார். கூட்டத்தில் அவர் பேசுகையில், நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் அருணாசலபிரதேசம் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கை வளமும், மனித ஆற்றலும் கொண்ட அருணாசலபிரதேசம், முதலீடுகளை ஈர்க்க ஏற்ற மாநிலம் ஆகும்.
நாட்டின் ஒட்டுமொத்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு ஒவ்வொரு துறையிலும் பெண்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். அருணாசலபிரதேசம் உள்பட அனைத்து சட்டசபைகளிலும் அவர்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். இதுபோல், மக்கள் பிரதிநிதிகள் இடம்பெறும் அனைத்து அமைப்புகளிலும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்.