பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உலக வங்கி, அந்நாட்டின் தனிநபர் வருமானத்தை குறைத்து அறிவித்துள்ளது. முன்னதாக 2022 ஆம் நிதியாண்டில், 1613.8 டாலர்களாக அறிவிக்கப்பட்டு இருந்த தனிநபர் வருமானம், 2023 ஆம் நிதியாண்டில் 1399.1 டாலர்களாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 2022 ஆம் நிதியாண்டில் 4.2% ஆக இருந்த தனிநபர் ஜிடிபி வளர்ச்சி, 2023 ஆம் நிதி ஆண்டில் மைனஸ் 1.5% ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானின் ஒட்டுமொத்த ஜிடிபி வளர்ச்சி கணிப்பு 0.4% ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பாகிஸ்தானில் தொடர்ந்து வருவாய் குறையும் எனவும், பஞ்சம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த நிதியாண்டில், 37.2% நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் கொண்டவர்கள் வறுமையை சந்தித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானின் வேலைவாய்ப்பின்மை விகிதம் முந்தைய ஆண்டின் 10.1% ஐ விட 0.1% உயர்ந்து, 10.2% அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.