வடக்கு காசாவில் உலக உணவுத் திட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் உணவு வழங்குவதை நிறுத்தி உள்ளனர்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே 130 நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிப்பதாக கூறிய இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனை அடுத்து காசா பகுதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர். அங்கிருந்து செல்லாமல் தங்கிய மக்களுக்காக ஐநா சபை உலக உணவு திட்டம் என்னும் அமைப்பின் வழியாக உணவு வழங்கி வந்தது. இந்நிலையில் வடக்கு காசாவில் உணவுகளை விநியோகிக்க சென்ற வாகனங்களை மக்கள் சூழ்ந்து கொண்டு உணவு பண்டங்களை சூறையாடினர். ஒரு சில இடங்களில் வாகன ஓட்டுனர்கள் தாக்கப்பட்டனர். இவ்வாறு அங்கு அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. இதனை அடுத்து உலக உணவுத் திட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் உணவு வழங்குவதை நிறுத்தி உள்ளனர்.
இது குறித்து அந்த அமைப்பு கூறி இருப்பதாவது, வடக்கு காசா பகுதியில் கட்டுப்பாடற்ற சூழல் நிலவுகிறது. வன்முறை அதிகமாகி அங்கு சட்டம் ஒழுங்கற்ற நிலை ஏற்பட்டு விட்டது. உணவுக்காக கும்பலாக சென்று தாக்குதலில் ஈடுபடுகின்றனர். உணவு களவாடப்படுதல் மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. மக்கள் அங்கு பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர். பசி மற்றும் நோய் தாக்குதல் போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். இதனால் உணவு வினியோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு கேட்டுள்ளோம். விரைவில் உணவு விநியோகம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வடக்கு காசாவில் குடிநீர், உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.














