உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
ஜப்பான் நாட்டின் கோபே நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா தடகள உலக சாம்பியன் ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டி மே 17ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் இந்தியாவின் சார்பில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியாவிற்கான முதல் தங்கப் பதக்கத்தை தீப்தி ஜீவன் ஜி 400மீட்டர் டி20 பிரிவில் பெற்றுக் கொடுத்தார். மேலும் ஓட்டப்பந்தய வீராங்கனை பிரீத்தி பால், உயரம் தாண்டுதல் வீரர் நிஷாத் குமார் ஆகியோர் வெண்கலம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்றனர். இவ்வகையில் தற்போது ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதன்படி இந்தியா 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் என மொத்தம் பத்து பதக்கம் பெற்று புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது