உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் உள்ள லியாங் கரம்புவாங்கின் சுண்ணாம்புக் குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியம் கிட்டத்தட்ட 51200 ஆண்டுகள் பழமையானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் கண்டறியப்பட்ட உலகின் பழமையான குகை ஓவியத்தை விட இது 5000 ஆண்டுகள் பழமையானதாகும்.
உலகின் பழமையான குகை ஓவியம் மூலம் அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை முறை, சிந்தனை போன்றவற்றை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் கண்டறியப்பட்டுள்ள உலகின் பழமையான குகை ஓவியத்தில், ஒரு பன்றி மற்றும் 3 மனிதர்கள் இடம்பெற்றுள்ளனர். இது ஒரு கதையை சித்தரிப்பதாக அமைந்துள்ளது. எனவே, அந்த காலகட்டத்திலேயே மக்கள் கதை சொல்லிகளாக இருந்துள்ளனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முன்னதாக, 75000 முதல் 100000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களில், முக்கோணம், வட்டம் போன்ற வடிவங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. ஆனால், இந்தோனேசியா குகை ஓவியத்தில் கதை சித்தரிக்கப்பட்டுள்ளது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.