சீன அதிபர் ஜி ஜின்பிங், திங்கள்கிழமை ரஷ்யா சென்று, அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இந்த பயணம் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த செய்தியை வெளியிட்டு பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சூன் யங்கிடம், “போர் நிறுத்தம் குறித்து பேசப்படுமா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பேச்சு வார்த்தை தான் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு என்பதில் சீனா நம்பிக்கை கொண்டிருக்கிறது” என்று பதிலளித்துள்ளார்.
முன்னதாக, சீன அரசு சார்பில், கடந்த மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில், “உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகள் முழுமையான போர் நிறுத்தத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், ரஷ்ய நாட்டின் பாதுகாப்புக்கு மேற்கத்திய நாடுகள் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து நாடுகளின் இறையாண்மையும் மதிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் சீனா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த சந்திப்பின் விளைவாக, முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.