யாளி

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளும் தங்களுக்கென ஒரு ...

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளும் தங்களுக்கென ஒரு அதிசக்தி வாய்ந்த உயிரினத்தைக் கொண்டுள்ளன. சீனத்தின் நீண்ட பாம்புடல் டிராகன், கிரேக்கத்தின் பலதலை டிராகன் ஐட்ரா, நெருப்பில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ், மாயன் இனத்தின் சிறகுடைய பாம்பு, பனிசூழ்ந்த மலைகளிலும், துருவங்களிலும் வாழும் யெட்டி, ஒற்றைக்கொம்பு கொண்ட யூனிகோர்ன் மற்றும் சிறகுடைய குதிரை பெகாசஸ் என உலகமெங்கும் இயற்கைக்குப் புறம்பானத் தோற்றமும் ஆற்றலும் கொண்ட உயிரினங்கள் பற்றியக் கதைகள் பலகாலமாகப் பேசப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தமிழகத்தின் "யாளி" திகழ்கிறது.

தென்னிந்தியக் கோவில் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. “இடும்படுபு அறியா வலம்படு வேட்டத்து வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி...” என்று அகநானூறு பாடல் ஒன்றில் புலவர் நக்கண்ணையார் குறிப்பிட்டுள்ளார். மேலும், இளநாகனார் பாடிய நற்றிணைப் பாடல் ஒன்று யாளி காட்டில் வாழும் விலங்கு என்றும், அது புலியைக் கொல்லும் என்றும், யானையைத் தன் நகங்களால் பற்றி இழுக்கும் என்றும் யாளியின் ஆற்றலை விளக்குகிறது.

"அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,
ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப்
பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதி
ஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும்
துன் அருங் கானம்"

என்பதே நற்றிணைக் கூறும் யாளியின் திறமையாகும்.

சிங்கத்தின் கால்கள், குதிரையின் உடல், யானையின் துதிக்கை, கூரியப் பற்கள், பெரியத் தோற்றம் - இவையே யாளியின் அடையாளம். ஆக, வலிமையின் அடையாளமாக விளங்கும் மூன்று மிருகங்களின் சேர்க்கையே யாளி ஆகும். பொதுவாகத் தமிழ் கோயில்களின் தூண்களில் எண்ணற்ற அளவில் யாளிகளைக் காணலாம். பலக் கோவில்களில், யாளியின் வாயில் முட்டை வடிவில் ஒரு கல் உருண்டை இருக்கும். அதனைக் கையை விட்டுச் சுழற்றலாம். ஆனால் வெளியே எடுக்க முடியாது. இதனை யாளி முட்டை என்பர். இது சிறந்த சிற்பக் கலைக்குச் சான்றாக உள்ளது. உண்மையில் இது அந்த விலங்கின் சிறப்பு உறுப்பாகவும் இருக்கலாம் என்ற நோக்கில் ஆய்வுகள் நடைப்பெற்று வருகின்றன.

யாளியின் உருவ அமைப்பைக் கொண்டு அதனை சிம்ம யாளி, யானை யாளி, மகர யாளி என்று மூன்றாக வகைப்படுத்துவார்கள். பெரும்பாலும் யாளியின் சிற்பம் ஒரு சிங்கத்தையோ அல்லது யானையையோ பின்னங்கால்களால் மிதித்தவாறு முன்னங்கால்களை உயர்த்தி, பாயும் விதத்தில் செதுக்கப் பட்டிருக்கும். யாளியின் அளவோடு ஒப்பிடும்போது சிங்கமும் யானையும் மிகச் சிறியதாகக் காணப்படும். இன்றளவில் நம்முடைய உலகில் தரைவாழ் வேட்டை விலங்குகளில் சக்திவாய்ந்தது சிங்கம், தாவர உண்ணிகளில் சக்திமிகுந்தது யானை. இவை இரண்டுமே யாளிகளின் இரைகளாக இருப்பதாக உருவகப்படுத்துவதில் இருந்து யாளிகளின் வலிமை முன்னிலைப்படுத்தப்படுகிறது. ஆட்டுத் தலையுடன் இருக்கும் யாளி மகர யாளி என்று அழைக்கப்படுகிறது. இந்த மூன்று யாளி வகைகளையும் தவிர சுருள் யாளி என்றும் ஒன்று உண்டு. சுருள்யாளி என்பது ஒரு சிற்ப அலங்காரக் குறியீடு ஆகும். தென்னிந்திய இந்து கோவில்களின் கைப்பிடிச் சுவரில் இந்த அமைப்பு செதுக்கப்பட்டு இருக்கும். தலைத் திரும்பிய யாளி உருவத்தின் வாய்ப்புறத்திலிருந்து வளைவு வளைவாகச் செல்லும் கல் அலங்காரத்தைக் கொண்டிருக்கும் யாளி உருவை சுருள்யாளி என்பர். குறிப்பாகக் கல்மண்டபப் படிகளின் சுவர்களில் இவற்றைக் காணலாம்.

இந்த யாளிகளைப் பற்றிப் பலக் கதைகள் கூறப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, இந்த விலங்கு தமிழர்களின் ஆதி நிலப்பகுதியான குமரிக் கண்டத்தில் வாழ்ந்தது என்றும்; அந்தக் கண்டம் அழியும் பொழுதில், இந்த விலங்கினமும் அழிந்தது என்பதாகும். மற்றொன்று இதுவே டைனோசரின் வடிவமாகும் என்றக் கூற்று. ஆனால், இவை இரண்டுக் கருத்துக்களும் ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

மேலும், யாளிகள் தமிழகக் கோவில்களில் ஆயிரம் ஆண்டுகளாகத்தான் அறியப்படுகின்றன. அதற்கு முன்னால் அவை இருந்ததற்கானச் சான்றுகள் இல்லை. தமிழகத்தில் ஆரம்பக்காலக் கோயில் அமைப்புகள் செங்கற்களால் ஆனதாக இருந்தது. அவை அழிந்ததால் யாளிகளைப் பற்றி அந்தக் கோவில்களில் ஏதேனும் ஆதாரம் இருந்ததா என்பதை அறிய முடியவில்லை. 7ம் நூற்றாண்டில் பாறைகளைக் குடைந்து செய்யப்படும் குடைவரைக் கோயில் முறை உருவானது. 10ம் நூற்றாண்டு முதலே கற்றளி எனப்படும் கருங்கல்லாலான கோயில்கள் கட்டும் முறை அதிகரித்தது. எனினும், ஆரம்பக்கால கற்றளிகளிலோ, குடைவரைக் கோயில்களிலோ யாளி குறித்தத் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

தமிழகம் முழுவதிலும் உள்ள பலக் கோயில்களில் காணப்படும் யாளியுடன் கூடிய தூண்கள் பெரும்பாலும் 16ம் நூற்றாண்டு அளவில் அல்லது அதற்கு பின்னர் உருவானவையாகவே உள்ளன. நாயக்கர் ஆட்சியைத் தொடர்ந்தே தென்னகத்தின் கோயில்களில் யாளி சிற்பத்துக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. மதுரையில் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள யாளி சிற்பங்கள் மிகப்பிரசித்தி பெற்றவை. தமிழகத்தைத் தாண்டி கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் உருவானக் கோயில்களில் கூட யாளியின் சிற்பங்கள் அதிகளவு கிடைத்துள்ளன. முக்கியமாக, ஹம்பியில் உள்ள கோவில் சிதைவுகளில் பிரம்மிக்கவைக்கும் வகையிலான யாளி சிற்பங்கள் உள்ளன. பெரும்பாலும் சிம்மயாளி அல்லது கஜயாளியே பயன்படுத்தப்பட்டாலும் மீனாட்சி அம்மன் கோவிலில் நாய் யாளியும், விஜயநகரத்தின் கிருஷ்ணன் கோவிலில் எலி யாளியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமில்லாது இலங்கையின் சிற்பக்கலையிலும் யாளியின் தாக்கம் உள்ளது. கோவில்கள் மட்டுமல்லாது விகாரை முதலியவற்றின் வாயிலின் இரு புறமும் யாளிகள் வடிக்கப்பட்டன. தென்னிந்தியச் சிற்பத்தைப் போல இல்லாமல், இலங்கையின் யாளி சிற்பம் நான்கு கால்களையும் நிலத்தில் பதித்தவாறு, தலையைப் பின்பக்கமாகத் திருப்பிய படி இருப்பது இலங்கைக்கு உரிய தனித்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

தென்னிந்தியாவில் காணப்படும் கோவில் கோபுரங்கள் முதல், மண்டபத்தின் தூண்கள் வரை, ஆயிரக்கணக்கில் யாளி எனும் பிரமாண்ட விலங்கின் உருவத்தைச் சிலைகளாகப் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். எனவே இது வெறும் கற்பனையாக இருக்க முடியாது என்று பலர் கூறுகிறார்கள். கற்பனையோ நிதர்சனமோ யாளி என்பது நாம் அனைவரும் பெருமைப்படும் தமிழகச் சிற்பக்கலைப் பிரமாண்டமாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu