ஐநா மனித உரிமைகள் அமைப்பின் ஊழியர்கள் உட்பட ஒன்பது பேரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைது செய்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் காரணமாக செங்கடலில் இஸ்ரேல் ஆதரவு சரக்கு கப்பல்களின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக ஹவுதி கிளர்ச்சியாளர்களின் முகாம்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. அதோடு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுக்க அவர்களின் பொருளாதார வளங்களை தடை செய்துள்ளது. மேலும் ஏமன் அரசுக்கு 1.5 பில்லியன் டாலர் மதிப்பில் பொருளாதார உதவி செய்துள்ளது அமெரிக்கா.
இந்நிலையில் ஐநா மனித உரிமைகள் அமைப்பை சேர்ந்த ஊழியர்கள் உட்பட ஒன்பது பேரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைது செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் அனைவரும் நிவாரண குழுக்களை சேர்ந்த ஊழியர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கைதுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மேலும் இது குறித்து ஐநா தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.