யெஸ் வங்கி தனது நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கியின் வருடாந்திர நிகர லாபம் 45% சரிவை பதிவு செய்து, 202.43 கோடி ஆக பதிவாகியுள்ளது. நிதிநிலை அறிக்கை வெளியானதை தொடர்ந்து, யெஸ் பேங்க் பங்கு மதிப்பு 1.82% சரிவை பதிவு செய்துள்ளது. மேலும், 2023 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் இதுவரை, 20% சரிவு காணப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
2023 ஆம் நிதி ஆண்டுக்கான நிகர லாபம் 717.4 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. இதுவே முந்தைய 2022 ம் நிதி ஆண்டில், 1066.21 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், வங்கிக்கு வட்டி மூலமாக கிடைக்கும் வருவாய் 6216.24 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 25% உயர்வாகும். மேலும், கடந்த காலாண்டில், வங்கியின் மொத்த வருவாய் 4110.92 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 31% மற்றும் காலாண்டு அடிப்படையில் 5.4% உயர்வாகும். மேலும், மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, வங்கியின் ரொக்க மதிப்பு 19274.44 கோடியாக உள்ளது. இது முந்தைய நிதி ஆண்டில் 46639.59 கோடியாக பதிவானது குறிப்பிடத்தக்கது.