புதிய குடும்ப அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என பேரவையில் அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், புதிய குடும்ப அட்டைகள் விண்ணப்பித்த 15 நாட்களில் வழங்கப்படும் என்று அறிவித்தோம். அதன்படி கடந்த 23 மாதங்களில் 11,20,000 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டைகளில் 12, 84,000 அட்டைகள் முன்னுரிமை அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் 41, 68,292 பேர் பயனடைகின்றனர்.
புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு இனிமேல் வட்டாட்சியர் அலுவலகத்திற்கோ அல்லது இடைத்தரகர்களையோ மக்கள் அணுகத் தேவையில்லை. புதிய குடும்ப அட்டை அல்லது குடும்ப அட்டை நகல் பெறுவதற்கு ஆன்லைனில் குறைந்த கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டை வீட்டுக்கே வந்து சேரும் என்று தெரிவித்துள்ளார்.