செலவுகளை குறைத்து லாபத்தை பெருக்கும் நோக்கத்தில், பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக ஜோமாட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது. சுமார் 3% பணியாளர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அண்மையில், மோஹித் குப்தா, ராகுல் கஞ்சு உள்ளிட்ட நிறுவனத்தின் உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் தொடர்ச்சியாக நிறுவனத்தை விட்டு வெளியேறினர். இந்த சூழ்நிலையில், பணி நீக்கம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. அமேசான், மெட்டா போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே பணிநீக்க அறிவிப்பை வெளியிட்ட நிலையில், அந்த பட்டியலில் ஜோமாட்டோவும் இணைந்துள்ளது. முன்னதாக, கடந்த 2020 மே மாதத்தில், தனது 13% பணியாளர்களை நிறுவனம் பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில், நிறுவனத்தின் பணியாளர் எண்ணிக்கை 3800 ஆகும். எனவே, சுமார் 120 பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.