பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ திட்டத்தின் முதல் கட்டத்துக்கு தமிழக அரசு அரசாணை வெளியீடு.
பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ வழித்தடம் 52.94 கி.மீ. நீளத்தில் இரண்டு கட்டங்களாக அமைக்கப்பட உள்ளது. இதில், முதல் கட்டமாக பூந்தமல்லி முதல் சுங்குவார் சத்திரம் வரை 27.9 கி.மீ. தூரத்தில் ரூ.8,779 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த திட்டத்தின் பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ரூ.2,126 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதில், சாலை மற்றும் சிவில் பணிகளுக்கு ரூ.252 கோடி, நிலம் கையகப்படுத்தல் மற்றும் கட்டமைப்பு செலவுகளுக்கு ரூ.1,836 கோடி, சுற்றுச்சூழல் மற்றும் குடிசைப்பகுதி மறுசீரமைப்புக்கு ரூ.16 கோடி, வடிவமைப்பு மற்றும் பொது செலவுகளுக்கு ரூ.13.40 கோடி, இதர செலவுகளுக்கு ரூ.8.44 கோடி எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ.2,125.84 கோடி தேவைப்படும் நிலையில், அதை சுருக்கமாக ரூ.2,126 கோடியாக அரசு அறிவித்துள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு மூலம் மெட்ரோ திட்டத்தின் ஆரம்ப பணிகள் விரைவாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.














