ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாடுகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நேற்றைய தினம், ஜப்பானிய வலைத்தளம் ஒன்றில், ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாடுகள் உற்பத்தியை, இந்தியாவிற்கு மாற்ற, ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளிவந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக, இந்திய அமைச்சகத்தின் அறிவிப்பு இன்று வெளிவந்துள்ளது.
முன்னதாக, ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில், “ஐபோன் 13 உற்பத்தி இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், ஐபோன் 14 உற்பத்தியும் இந்தியாவில் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், ஐ பேடுகள் மற்றும் டேப்லெட்டுகளை வடிவமைக்கும் திட்டமும் இந்தியாவில் செயல்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்திருந்தது. சீனாவிலிருந்து, தனது நிறுவனத்தின் உற்பத்தியை இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு படிப்படியாக மாற்றும் நடவடிக்கையில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
ஏற்கனவே, ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, “இந்தியாவிலிருந்து ஏற்றுமதி ஆகும் ஐபோனின் மதிப்பு, கடந்த ஐந்து மாதங்களில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்துள்ளது. அத்துடன், அடுத்த ஒரு வருடத்திற்குள் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஐபோன் ஏற்றுமதியை இந்தியாவில் நடத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.