இஸ்ரோ, ககண்யான் திட்டத்திற்காகப் பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், குறைந்த உயரத்தில் இருந்து, குழுவினரைப் பாதுகாப்பாகத் தரையிறங்கச் செய்யும் பரிசோதனை முயற்சியில் இஸ்ரோ வெற்றி கண்டுள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககண்யான் திட்டத்தில் இஸ்ரோ தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதி, இஸ்ரோ சார்பாக, ககண்யான் திட்டத்தின் மூலம் விண்வெளியில் பயணிக்க இருக்கும் குழுவினரை, குறைந்த உயரத்தில் இருந்து, பாதுகாப்பாகத் தரையிறங்கச் செய்யும் பரிசோதனை முயற்சி ஸ்ரீஹரிகோட்டாவில் நடத்தப்பட்டது. இஸ்ரோ நடத்திய இந்தப் பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த Low Altitude Escape Motor (LEM) பரிசோதனை ககன்யான் திட்டத்தின் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்பட்டது. தற்போது, இது வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்களின் ஆரம்ப நிலை பயணத்தில், எதிர்பாராத விதமாக, ஏதாவது சிக்கல் நேர்ந்தால், உடனடியாக வெளியேறும் அம்சமாக இந்த LEM வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உருவாக்கம் மற்றும் செயல்பாடு குறித்து இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது. இந்த சிறப்பு வகை மோட்டாரில் நான்கு தலைகீழ் ஓட்ட முனைகள் உள்ளதாகவும், இதன் மூலம் எரிவாயு வெளியேற்றத்தின் திசை மாற்றப்பட்டு, விண்வெளி வீரர்களைப் பத்திரமாகத் தரையிறக்க முடியும் என்று இஸ்ரோ தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரோவின் இந்தச் சோதனை முயற்சி வெற்றி அடைந்ததற்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.