நியாய விலை கடைகளில் பொது மக்களை, பணம் கொடுத்து பொருட்களை வாங்க வேண்டும் என்று பணியாளர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழக கூட்டுறவுத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாக பலன்களை பெற்று வருகின்றனர்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு அளிக்கப்படும் பொருட்கள் தரம் குறைந்து காணப்படுவதாக ஆங்காங்கே புகார்கள் எழுந்துள்ளன. இதை அடுத்து பொருட்கள் தரமில்லாமல் இருக்கும் பட்சத்தில் அதை திரும்பி அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டது. நியாய விலை கடைகளில் தரையில் சிதறிய பொருட்களை, மறுபடியும் வினியோகம் செய்யக் கூடாது என்று நியாய விலை ஊழியர்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டது.
இதற்கிடையே, நியாய விலை கடைகளுக்கு வரும் பொது மக்களை, மளிகை பொருட்களை விலைக்கு வாங்குமாறு நியாய விலை கடை ஊழியர்கள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், தமிழக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நியாய விலை கடைகளில் பொது மக்களை பணம் கொடுத்து பொருட்களை வாங்க வேண்டும் என்று பணியாளர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது. பொது மக்கள் தாமாக முன்வந்து வாங்குவதற்கான விளம்பரத்தை மட்டும் மேற்கொள்ள வேண்டும். மேலும் நியாய விலை பொருட்கள் தவிர்த்து மற்ற பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்று சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டு உள்ளது" என்றார்.