ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பணவீக்கத்தால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. பணவீக்கம் அதிகமாக உள்ளதால், ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதனால், 4.9 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி 5.4 சதவீதமானது.
நுகர்வோர் பணவீக்கம் நிலைப்புத் தன்மையற்றதாக உள்ளது. இருப்பினும் , பணவீக்கம் 6 சதவீதமாகவே நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் விரிவடைந்து செல்கிறது.
மேலும், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாகவே நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சமையல் எண்ணெய் விலை இன்னும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் நடக்கும் பிரச்னைகள் காரணமாக இந்திய பொருளாதாரம் பாதிப்பை சந்திக்கும் சூழல் உள்ளது.
2022- 23 நிதியாண்டில் பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2023 - 24ல் நுகர்வோர் விலை குறியீடானது 5 சதவீதமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நேரடி அன்னிய முதலீடு 13.6 பில்லியன் டாலர் என வலுவாக இருந்தது. இது கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 11.6 பில்லியன் டாலர் ஆக இருந்தது என்று சக்திகாந்த தாஸ் கூறினார்.
ரெபோ வட்டி விகிதம் உயர்த்தப்படுவதால், வீடு, வாகன கடன் உள்ளிட்டவை உயர வாய்ப்பு உள்ளது.