நாடு முழுதும் 43 மத்திய பல்கலைக் கழகங்கள் உள்ளன. இதில் மொத்தம், 6,549 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், எஸ்.சி., பிரிவினருக்கான 988 இடங்கள், எஸ்.டி., பிரிவினருக்கான 576 இடங்கள், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான 1,761 இடங்களும் அடங்கும்.
தமிழகத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களில், 52 இடங்கள் காலியாக உள்ளன. மேலும், தெலுங்கானாவில் 304, புதுச்சேரியில் 156, கர்நாடகாவில், 94, கேரளாவில் 83, புதுடில்லி பல்கலைகழகத்தில் 900, அலகாபாத் பல்கலைகழகத்தில் 622, பனாரஸ் ஹிந்து பல்கலைகழகத்தில் 532, அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் 498, புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் 326 இடங்கள் காலியாக உள்ளன.
பணி ஓய்வு, பணி விலகல், மாணவர் சேர்க்கை அதிகரிப்பு மற்றும் கூடுதல் தேவை போன்ற காரணங்களில், ஆசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் பணியிடங்களை கடந்த 2021, செப்டம்பர் 5ல் இருந்து ஓர் ஆண்டுக்குள் நிரப்புவதை ஒரு இயக்கமாக மேற்கொள்ளும்படி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரவிட்டார்.
கடந்த ஆகஸ் டில் 4,807 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அந்த விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனையில் உள்ளன. சில வழக்குகளால், பணி நியமனம் தாமதம்அடைந்துள்ளது.
இதற்கிடையே, மத்திய பல்கலைகழகங்களில் துறைகளுக்குள் நடக்கும் அரசியல், சிலருக்கு மட்டும் சலுகைகள் காட்டுவது, அரசியல் பின்புலம், பணி நிரந்தரமின்மை போன்ற காரணங்களால், நல்ல ஆசிரியர்கள் தனியார் பல்கலை கழகங்களுக்கு செல்வதையே விரும்புகின்றனர். இதனால், மத்திய பல்கலைகழகங்களின் காலியிடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.