ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக ஆங் சான் சூகிக்கு மியான்மர் நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி மியான்மர் நாட்டில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. மேலும், அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. ஏற்கனவே ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுதல், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக ஆங் சாங் சூகி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊழல் குற்றங்களுக்காக ஆங் சான் சூகிக்கு மியான்மர் ராணுவ நீதிமன்றம் மேலும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 77 வயதான ஆங் சான் சூகி, மியான்மரின் இராணுவ ஆட்சியை எதிர்த்தவர் . மேலும் நோபல் பரிசு பெற்றவர் . இவர் ஊழல் மற்றும் தேர்தல் விதிமீறல்கள் என 18 குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்நிலையில் சூகி தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். ஆனால் சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்காக அவர் நிறுவிய நிறுவனமான டா கின் கீ பவுண்டேசனில் இருந்து வீடுகளை கட்டுவதற்கும், அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை தள்ளுபடி விலையில் குத்தகைக்கு எடுத்ததற்கும், அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதற்காகவும் அவர் குற்றவாளி என நிரூபிக்க ஆதாரங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஆங் சான் சூகி தேர்தலில் நிற்பதை தடுக்கவே ராணுவ அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், இந்த தண்டனையை "அநியாயமானது" என்று கண்டித்ததோடு, சூகியை உடனடியாக விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.