காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே, வல்லப்பாக்கம் என்ற கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், 1000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பழமையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடைபெற்ற பணியின் போது, இந்த கல்வெட்டு கிடைக்கப் பெற்றுள்ளது. இது குறித்து பேசிய தொல்லியல் ஆலோசகர் கி ஸ்ரீதரன், "இந்தக் கோயில் கிபி 1263 ஆண்டு கட்டப்பட்டதாக கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. கோவில் முதலாம் திருச்சுற்றில், ராஜராஜ சோழனின் கல்வெட்டு பொறிக்கப்பட்ட கல் ஒன்று கிடைத்துள்ளது. மேலும், திப்பரசன் என்பவர் திப்பசமுத்திரம் என்ற ஏரியை ஏற்படுத்தியது மற்றொரு கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. மேலும், தொண்டை நாட்டை ஆண்ட பார்த்திவேந்திரபன்மர் என்ற மன்னரின் 16 வது ஆட்சி ஆண்டு கல்வெட்டு கிடைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு பெருமாள் கோவில் எழுப்பப்பட்டு, அதற்கு தானமாக நிலம் வழங்கப்பட்டுள்ளதும் குறிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் பல்வேறு கல்வெட்டுகள் கிடைத்துள்ளதால், பல வரலாற்று நிகழ்வுகளின் ஆதார இணைப்பாக இந்த கோவில் விளங்குகிறது” என்று கூறியுள்ளார்.