மோசமான வானிலை காரணமாக 14 பெங்களூரு விமானங்கள் சென்னையில் அவசரமாக தரையிறங்கின.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு முதல் மோசமான வானிலை நிலவியது. இதனால் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய கொல்கத்தா, டெல்லி, சென்னை, புவனேஸ்வர், மும்பை, சூரத், கோலாலம்பூர், ஹாங்காங் உள்பட 14 விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்துக்கு அடுத்தடுத்து 14 விமானங்களும் வந்து அவசரமாக தரையிறங்கின.
பயணிகள் விமானங்களை விட்டு கீழே இறக்காமல் விமானங்களிலேயே அமர வைத்து உணவு, குடிநீர் வழங்க ஏற்பாடுகளை விமான நிறுவன அதிகாரிகள் செய்து கொடுத்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூருவில் வானிலை சீரடைந்த பின் விமானங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக தாமதமாக புறப்பட்டு சென்றன.