குற்றங்களில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 14 பேருக்கு தலீபான்கள் கசையடி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனையடுத்து, ஆப்கானிஸ்தானில் பெண்களின் சுதந்திரம் தடைபட்டது. பெண்கள் சுதந்திரம், கல்வி, ஆடை சுதந்திரம் உள்பட பல்வேறு துறையிலும் தலீபான்கள் அடக்குமுறையை கையாள்கின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் லோகர் மாகாணத்தின் பல் ஆலம் நகரில் மைதானத்தில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் பெண்கள் உள்பட 14 பேருக்கு தலீபான்கள் கசையடி தண்டனை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு, பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 3 பெண்கள் 11 ஆண்கள் என மொத்தம் 14 பேர் பல் ஆலம் நகரில் உள்ள மைதானத்திற்கு இன்று காலை அழைத்து வரப்பட்டனர். தண்டனை வழங்கப்படுவதை பார்வையிட வருமாறு டுவிட்டர் உள்பட சமூகவலைதளம் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காலை மைதானத்தில் நூற்றுக்கணக்கான ஆண்கள் குவிந்தனர். அங்கு குற்றத்தின் அடிப்படையில் 14 பேருக்கும் தலீபான்கள் 21 முதல் 39 கசையடிகள் தண்டனையாக வழங்கினர். தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டத்தை அமல்படுத்தி கடுமையான தண்டனைகள் விதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.