ஜம்முவின் சர்வதேச எல்லையில் 2 ஊடுருவல்களை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்தனர்.
ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புராவில் அர்னியா சர்வதேச எல்லை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2.30 மணியளவில் மர்மநபர் நடமாட்டம் தெரிந்தது. அவர் சர்வதேச எல்லையை தாண்டி இந்திய பகுதிக்குள் நுழைந்துள்ளார். வீரர்கள் பலமுறை எச்சரித்தும் அந்த நபர் அதனை பொருட்படுத்தவில்லை. இதனையடுத்து, வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஊடுருவியர் உயிரிழந்தார்.
இதேபோல், அதிகாலை 4.30 மணியளவில் சர்வதேச எல்லை பகுதியில் ஒருவர் ஊடுருவ முயன்றுள்ளார். வீரர்கள் அவரை எச்சரித்தவுடன் அவர் கைகளை உயர்த்தி சரண் அடைவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இருந்து பதுங்கி இருந்த ஒரு பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து ஏகே ரக துப்பாக்கிகள், வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.