அக்டோபர் முதல் டிசம்பர் வரை பண்டிகைகள் அதிகமாக நடைபெறும் காலமாக இருப்பதால், பலரும் சொந்த ஊர்களுக்குச் சென்று வருவதற்காக ரெயில் பயணம் மேற்கொள்வர். இதனை கருத்தில் கொண்டு ரெயில்வே அமைச்சகம் மகிழ்ச்சியான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 13 முதல் 26ஆம் தேதி மற்றும் நவம்பர் 17 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை பயணிக்கும் பயணிகள், ரிட்டன் டிக்கெட் முன்பதிவுடன் பெற்றால், அதற்காக 20 சதவீத சலுகை வழங்கப்படும். இந்த சலுகை ரிட்டன் பயணத்திற்கே மட்டுமே வழங்கப்படும்.
முன்பதிவு செய்யும் கால அவகாசம் தற்போது உள்ள நடைமுறையின்படி 60 நாட்கள் ஆகும். இதன்படி, இந்த சலுகைக்கான முன்பதிவு வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கும். பயணிகள், ரிட்டன் பயணத்தை 60 நாட்கள் கால வரம்புக்குள் முன்பதிவுடன் சேர்த்தால் இந்த சலுகையை பெற முடியும். இது பொதுமக்களுக்கு நிதிச்சுமையை குறைக்கும் வகையிலும், பண்டிகை காலத்தில் பயண வசதியை அதிகரிக்கும் வகையிலும் பெரிய நன்மையாக இருக்கலாம்.














