200 கி.மீ தூர இலக்கை தாக்கும் மின்காந்த பீரங்கிகளின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
ராணுவத்தின் முப்படைகளின் பயன்பாட்டுக்காக, எலக்ட்ரோ மேக்னடிக் ரயில்கன் (இஎம்ஆர்ஜி) என்ற சிறிய ரக மின்காந்த பீரங்கிகளை டிஆர்டிஓ தயாரித்துள்ளது. இந்த இஎம்ஆர்ஜி, போர்கப்பல்கள் அனைத்திலும் எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக பொருத்தப்பட்டிருக்கும். இதன் குண்டுகள் மணிக்கு 4,500 மைல் வேகத்தில் சென்று தாக்கும் திறன் படைத்தவை. இதில் பயன்படுத்தப்படும் குண்டுகள் லேசர்கள் மற்றும் இயக்க ஆற்றல் மூலம் அதிவேகத்தில் சென்று தாக்கும்.
இஎம்ஆர்ஜி ரக பீரங்கிகளை தயாரித்துள்ள டிஆர்டிஓ அதில் 12 எம்.எம் குண்டுகளை வைத்து தற்போது வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது. இந்த குண்டுகள் சுமார் 200 கி.மீ தூரமுள்ள இலக்குகளை, அதிவேகத்தில் சென்றும் தாக்கும் திறன் படைத்தவை. அடுத்ததாக 30 எம்.எம் குண்டுகளை பயன்படுத்தி டிஆர்டிஓ சோதனை செய்யவுள்ளது.
10 மெகாஜோல்ஸ் திறனுடன் உருவாக்கியுள்ள இஎம்ஆர்ஜி பீரங்கிகள் ஒரு கிலோ கிராம் குண்டுகளை வினாடிக்கு 2,000 மீட்டர் வேகத்தில் சுடும் திறன் படைத்தவை. மின்காந்த சக்தியில் இயங்கும் இதன் குண்டுகள், ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் சென்று தாக்கும். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஆயுத ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் இந்த இஎம்ஆர்ஜி பீரங்கிகள் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளன.