தாய்லாந்தின் வட கிழக்கு மாகாணமான நாங் புவா லாம்புவின் தலைநகரில் உள்ள நர்சரி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 23 குழந்தைகள் உட்பட 36 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காவல்துறையைச் சேர்ந்த முன்னாள் காவலரான பன்யா கம்ராப் என்பவர் இதனை நிகழ்த்தியதாக உறுதியாகி உள்ளது. 34 வயதாகும் அவர், போதை மருந்து சோதனையில் தோல்வி அடைந்ததால் பணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது தாக்குதல் குறித்த காரணம் இதுவரை தெரியவில்லை. இந்தத் தாக்குதலில் 23 குழந்தைகள், 12 பெரியவர்கள் உயிரிழந்துள்ளனர். இறுதியில், தாக்குதலில் ஈடுபட்ட பன்யா கம்ராப் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. மேலும், சட்டவிரோதமாக போதைப் பொருள் விற்று வந்த அவர், தனது மனைவி மற்றும் மகனையும் கொன்றுள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. தாக்குதல் நடைபெற்ற நர்சரியைப் பார்வையிட்ட தாய்லாந்து காவல்துறையினர், இந்தச் செய்தியை உறுதி செய்துள்ளனர்.
தாய்லாந்தில் துப்பாக்கி உரிமம் பெறுவது பிற நாடுகளை விட கடினம் என்பதால் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்துக் கொள்வது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் ஏற்படுவதாக பேசப்படுகிறது.














