'பிரெய்லி வடிவில், 46 தமிழ் செவ்வியல் நுால்கள் அச்சிட்டு வெளியிடப்படும்'' என, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பிரெய்லி நுால் வெளியிட திட்டமிட்டுள்ளது. இது குறித்து செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் சந்திரசேகரன் கூறுகையில், செம்மொழி நிறுவனத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்ட பணிகளுள் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், 46 தமிழ் செவ்வியல் நுால்களை பிரெய்லி நுால்களாக வெளியிடும் திட்டம் நிறைவுபெறும் நிலையில் உள்ளது.
இதில், தொல்காப்பியம், எட்டுத்தொகை, திருக்குறள் உள்ளிட்ட நுால்கள் இடம்பெற்றுள்ளன. இந்நுால்கள் அனைத்திலும் எளிய உரையும், மூல பாடங்கள் எளிய சந்தி அமைப்பிலும் இடம் பெற்றிருக்கும். இந்த அனைத்து நுால்களும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அவர் கூறினார்.