செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏரியில் வினாடிக்கு 642 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைபாக்கம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 21 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது.
ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடி நீரில் 2,850 மில்லியன் கனஅடி நீர் நிரம்பியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியை பொறுத்தவரை சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய பிரதான ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஏரியில் இருந்து கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 642 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இருந்து தொடர்ந்து 3-வது நாளாக 100 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. நீர் வெளியேற்றத்தின் காரணமாக அப்பகுதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.