இந்தியா-சீனா இடையேயான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் இந்தோ-திபெத் எல்லை காவல் படையை வலுப்படுத்தும் வகையில் புதிதாக 7 படைப் பிரிவுகளை உருவாக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கான ஒப்புதலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபை நேற்று வழங்கியது. இதன்மூலம் அந்த படைப் பிரிவில் கூடு தலாக 9,400 வீரர்கள் சேர்க்கப்பட உள்ளனர். கிழக்கு லடாக் மற்றும் அருணாசல பிரதேசத்தின் தவாங் பகுதி என அடுத்தடுத்து அத்துமீறலில் சீனா ஈடுபட்டு வரும் சூழலில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது. இந்த ஒப்புதலின் படி படையில் புதிதாக சேர்க்கப்படும் வீரர்கள் இந்திய-சீன எல்லைப்பகுதியில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள 47 எல்லை நிலைகள் மற்றும் 12 படை முகாம்களில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
லடாக்கின் எல்லைப் பகுதிகளில் அனைத்து கால நிலைகளிலும் தடையற்ற போக்குவரத்தை உறுதிப் படுத்தும் வகையில் நிமு-பதாம்-டர்ச்சா சாலையை இணைக்கும் 4.1 கி.மீ. நீள ஷின்குன் லா சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரி சபை நேற்று ஒப்புதல் அளித்தது. ரூ.1,681 கோடியில் அமைக்கப்படும் இந்த சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும். இதன்மூலம் லடாக் பகுதியை குறிப்பாக ஜன்ஸ்கர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்க முடியும் என்று மந்திரி சபை கூட்டத்துக்கு பிறகு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.