மாண்டஸ் புயல் தாக்கத்தால் ரூ.700 கோடி அளவுக்கு சென்னையில் சேதமடைந்துள்ளதாக முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
மாண்டஸ் புயல் தாக்கத்தால் சென்னையில் பல இடங்களில் 400 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தது. 200 க்கும் மேற்பட்ட பெரிய மரக்கிளைகள் விழுந்தன. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் என 644 மெட்ரிக் டன் அளவு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், புயலால் பல இடங்களில் மரங்கள் விழுந்தது. பல இடங்களில் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகளில் உடனடி சீரமைப்பு பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் சேத மதிப்பாக 700 கோடி ரூபாய் முதற்கட்டமாக கணக்கிடப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களுக்கு பின், மொத்த சேத மதிப்பு கணக்கிடப்பட்டு, அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். சில இடங்களில் கணக்கில் வராமல் இருக்கலாம். அவற்றை கணக்கிடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது என்றார்.