கேரளாவில் மழை பாதிப்பால் 7,850 பேர் முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.
கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பல மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்கிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழைக்கு ஆயிரக்கணக்கான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து சேதம் அடைந்து உள்ளன. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 1,023 வீடுகள் பகுதி அளவிலும், 51 வீடுகள் முழுமையாகவும் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுமக்கள் தங்குவதற்காக மாநிலம் முழுவதும் 200 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தற்போதைய நிலவரப்படி 7,850 பேர் தஞ்சம் அடைந்து உள்ளனர். கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.