தமிழக விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த ரூ.40.89 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 63வது குடியரசு தின தடகளப் போட்டியின் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பேசுகையில், பள்ளிக்கல்வித்துறையுடன் விளையாட்டுத்துறை இணைந்து மாணவர்களுக்கு போட்டிகளை நடத்துகிறது. விளையாட்டுத்துறையை மேம்படுத்த முதல்வர் தனி கவனம் செலுத்துகிறார்.
மேலும், தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெற்றி பெறுகிற வீரர்களை உடனுக்குடன் அழைத்து பாராட்டி ஊக்கப்படுத்துகிறார். ஆட்சிப் பொறுப்பேற்ற 15 மாதங்களில் 1,433 வீரர்களுக்கு ரூ.40.89 கோடி பரிசுத்தொகையை வழங்கியிருக்கிறார் என்றார்.