ஜம்மு - காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா ஆய்வு கூட்டம் நடத்தினார்.
2019- 2022 ஜூலை வரை, ஐந்து காஷ்மீரி பண்டிட்கள், 16 ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் உட்பட 118 அப்பாவி பொதுமக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் காஷ்மீர் பண்டிட்கள் அச்சம் அடைந்தனர். தங்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றும்படி வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஷ்மீரி பண்டிட் சமூகத்தை சேர்ந்த 56 அரசு ஊழியர்களை படுகொலை செய்ய இருப்பதாக லஷ்கர் பயங்கரவாத குழுவின் துணை அமைப்பு சமீபத்தில் ஊழியர்களின் பெயர் மற்றும் விபரங்களையும் வெளியிட்டது. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில் உள்துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள், துணை ராணுவ படையினர், அரசு ஊழியர்களுக்கு விடுத்திருக்கும் மிரட்டலை ஒடுக்குவது குறித்து அவர்கள் விவாதித்ததாக தெரிகிறது.