இன்று தீவிரமான எக்ஸ் கிளாஸ் சூரிய புயல் பூமியைத் தாக்க உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரத் தொடக்கத்தின் முதலே பூமியை சூரிய புயல்கள் தாக்கி வருகின்றன. இதனால், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில் ஜிபிஎஸ் சேவை பாதிப்படைந்தது. இந்நிலையில், இன்று 70% சூரிய புயல் பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். கடந்த 10 நாட்களில் இது நான்காவது சூரிய புயல் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள தகவல்கள் படி, சூரியனில் உள்ள பல்வேறு புள்ளிகள் பூமியை நோக்கிய படி உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் புயல் கதிர்கள் எக்ஸ் மற்றும் எம் ரகத்தைச் சேர்ந்தவையாக இருக்கும். இத்துடன், தொடர்ச்சியாக சூரிய புயலின் தீவிரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, விரைவில் 1859 ஆம் ஆண்டில் ஏற்பட்ட காரிங்டன் நிகழ்வு போல பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.