சிரியாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பலியாகினர்.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது. டமாஸ்கஸ் அருகே மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு நிறைந்த ராணுவ வளாகங்களின் தாயகமாக விளங்கும் கபர் சூசா நகர் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. அதிக மக்கள் தொகை கொண்ட நகர் மீது வான்தாக்குதல் நடத்தப்பட்டதில் அங்குள்ள ஏராளமான குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமாகின. இதில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்த வான்தாக்குதலால் சிரியா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.