கடன் சேவைகளை வழங்கும் வெளிநாட்டு நிறுவனமான ஹெச் எஸ் பி சி, தனது இந்தியச் செயல்பாடுகளில் 15.04% லாபத்தை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில், நிறுவனத்தின் வரிக்கு முன்னான லாபம், கடந்த ஆண்டில் 1.277 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2022 ஆம் ஆண்டு, நிறுவனத்தின் இந்தியப் பிரிவில் புதிதாக 1000 பேர் பணியமர்த்தப்பட்டு, மொத்த பணியாளர் எண்ணிக்கை 39,000 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவில் கடன் சேவைகளை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களில், மிகப்பெரிய நிறுவனமாக ஹெச் எஸ் பி சி உருவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில், இந்த நிதி நிறுவனத்திற்கு தனிப்பட்ட வங்கி சேவைகள் மற்றும் சொத்துக்கள் சார்ந்த முறையில் கிடைத்த லாபம் இரு மடங்குக்கும் மேலாக உயர்ந்து, 45 மில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், கார்ப்பரேட் செயல்பாடுகள் மூலம் கிடைத்த லாபம் 306 மில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.