கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
ஜூலை 11 பொதுக்குழுவை செல்லாது என்று அறிவிக்க கோரி ஓபிஎஸ் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனிநீதிபதி, ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு வழங்கினார். தனிநீதிபதி தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பு மேல்முறையீடு செய்தது. பழனிசாமி மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இருநீதிபதிகள் அமர்வு பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியது. இருநீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில், மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கியதும் செல்லும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது














