ஹெச்டிஎஃப்சி வங்கியின் சர்வர்கள் இன்று முடங்கியுள்ளதாக இந்தியா முழுவதும் இருந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. வங்கியின் இணையதளம் மற்றும் கைப்பேசி செயலிகளை பயன்படுத்த முடியவில்லை என்று வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக, பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பல வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கிற்குள் உள்நுழைய முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மாதத்தின் இறுதி நாளான இன்று, பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு சம்பள தினம் என்பதால், இந்த பிரச்சனை மிகவும் கவனம் பெற்றுள்ளது.
ஹெச்டிஎஃப்சி தளம் முடங்கியது தொடர்பாக ட்விட்டரில் வேகமாக செய்திகள் பகிரப்பட்டுள்ளன. நேரடியாக, ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு, 'எப்பொழுது சேவைகள் திரும்பும்?' என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், சர்வர்கள் முடங்கியது தொடர்பாக, அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதையும், ஹெச்டிஎஃப்சி வங்கி இதுவரை வெளியிடவில்லை. அதே வேளையில், புகார் அளித்த வாடிக்கையாளர்களுக்கு, ட்விட்டர் வாயிலாக மன்னிப்பு கோரியதுடன், வங்கியின் 24 மணி நேர இலவச அழைப்பு எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.