இந்திய வானியற்பியல் மையத்தை (ஐஐஏ) சேர்ந்த விஞ்ஞானிகள், குறைந்த செலவில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஸ்டார் சென்சார்’ கருவியை உருவாக்கி இருந்தனர். ‘ஸ்டார் பெர்ரி சென்ஸ்’ என்று பெயரிடப்பட்ட இந்த கருவி மூலம், செயற்கைக்கோளின் இருப்பிடத்தை கண்டறிய முடியும். கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி, இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி 55 ராக்கெட்டில், இந்தக் கருவி விண்ணுக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை அடிப்படையில் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த கருவி, வெற்றிகரமாக இயங்குவதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஸ்டார் சென்சார், விண்ணில் உள்ள நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு, தான் இருக்கும் இடத்தை கணக்கிடுகிறது. மேலும், விண்வெளியில் உள்ள கடுமையான சூழல்களை தாங்கும் திறனோடு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி, முதல் முறையாக விண்ணில் பரிசோதனை செய்யப்பட்டு, வெற்றியடைந்துள்ளது. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட இந்த கருவியை, அனைத்து வகை செயற்கை கோள்களிலும் பொருத்தி அனுப்ப முடியும். ரேஸ்பெர்ரிபை என்ற மினி கம்ப்யூட்டர் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தக் கருவி மூலம், செயற்கைக்கோள்களின் இருப்பிடத்தை துல்லியமாக கணக்கிட முடியும்” என்று ஐஐஏ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.