மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் உட்பட ஏராளமானவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில் 05.05.2023 அன்று மணிப்பூர் மாநிலத்தில் மருத்துவம் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து மணிப்பூர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து விவாதித்து அவர்களுக்கு தேவையான தண்ணீர், உணவு உள்ளிட்ட அனைத்து உதவிகளும் தமிழ்நாடு அரசால், அம்மாநில அரசு மற்றும் மணிப்பூர் தமிழ்ச் சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு திரும்பிவர விருப்பம் தெரிவித்துள்ள மாணவர்களை அழைத்துவர அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை மூலமாக விமான பயணச் சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் இன்று இரவு சென்னை விமான நிலையம் வந்தடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.