கடந்த ஜூன் 17ஆம் தேதி நிலவரப்படி, 2024 ஆம் நிதி ஆண்டில் வசூல் செய்யப்பட்டுள்ள நேரடி வரி 11.18% உயர்ந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று வெளியிடப்பட்டுள்ள மத்திய அமைச்சகத்தின் அறிக்கையில், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் 17ஆம் தேதி வரை, 379760 கோடி ரூபாய் நேரடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. அதில், தனிநபர் வருமான வரி மூலம் கிடைத்த வருவாய் 222196 கோடி ரூபாய் ஆகவும், பெரு நிறுவனங்களின் வருமான வரி வருவாய் 156949 ஆகவும் சொல்லப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை படி, நேரடி வரி வருவாய் 4.1 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. இது, முந்தைய ஆண்டை விட 12.73% உயர்வாகும். இதில், பெரு நிறுவனங்களின் வரி 1.87 லட்சம் கோடி ரூபாயாகவும், தனிநபர் வருமான வரி 2.31 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது. அதே வேளையில், திருப்பி செலுத்தப்பட்டுள்ள வரித் தொகை 39578 கோடி ஆகும். இது முந்தைய ஆண்டை விட 30% உயர்வாகும்.