சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின் பங்கு மதிப்பு, இன்று ஒரே நாளில் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. பொதுத்துறை வங்கியாகச் செயல்பட்டு வந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஆர்பிஐ யால் பலவீனமான வங்கியாகப் பட்டியலிடப்பட்டிருந்தது. அதிக வாராக்கடன் மற்றும் வருவாய் பிரச்சனை போன்ற காரணங்களால், கடந்த 2017 ஆம் ஆண்டில், ஆர்பிஐ யின் நேரடி கண்காணிப்பில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கொண்டுவரப் பட்டது. இந்தியாவில், ஆர்பிஐ யின் பிசிஏ ஃப்ரேம்ஒர்க்கின் (PCA Framework) கீழ் செயல்பட்ட ஒரே வங்கியாக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால், இந்த வங்கியின் பங்குகள் 90% சரிந்தன. கடந்த அக்டோபர் 2020 வரை இதே நிலை நீடித்தது. அதன் பின்னர், வங்கியின் பங்குகள் சற்று ஏற்றம் கண்டன. வருவாய் இன்றி இருந்த சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி, முதன் முறையாக 2022 ஆம் நிதி ஆண்டில் லாபத்தைப் பதிவு செய்தது. இதற்கு முன்னர், 2015 ஆம் ஆண்டில் லாபம் பதிவானது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில், இந்த வங்கியின் நிகர லாபம் 1045 கோடி ரூபாயாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வங்கியின் நிகர லாபம் 14.2% உயர்ந்து, 234.78 கோடி ரூபாயாகப் பதிவானது. அத்துடன், இந்த வங்கியின் வாராக்கடன் விகிதம் 15.92 சதவீதத்தில் இருந்து 14.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால், அதே வேளையில், வங்கியின் மொத்த கடன் 11% உயர்ந்து, 1.95 லட்சம் கோடியாக உள்ளது.
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் வளர்ச்சி காரணமாக, 5 ஆண்டுகள் கழித்து, பலவீனமான வங்கிகள் பட்டியலில் இருந்து, ஆர்பிஐ இந்த வங்கியின் பெயரை நீக்கியுள்ளது. இதன் காரணமாக, இன்று ஒரே நாளில், இந்த வங்கியின் பங்குகள் 15 சதவீத உயர்வை சந்தித்துள்ளன. இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி ஒரு பங்கின் விலை 21.80 ரூபாய்க்கு வர்த்தகம் ஆனது.