திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.85,705 கோடி மதிப்புள்ள அசையா சொத்து உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் ஒய்.வி. சுப்பாரெட்டி தெரிவித்தார்.
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தலைமையில் அறங்காவலர் குழுக்கூட்டம் நடந்தது. இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் ஒய்.வி.சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், சாமானிய பக்தர்களை கருத்தில் கொண்டு பல தீர்மானங்கள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளன.
அதில், புரட்டாசி மாதம் முடிந்த பின்னர் அதிகாலை நடைபெற்று வரும் விஐபி பிரேக் தரிசனத்தை சோதனை அடிப்படையில் தினமும் காலை 10 மணியில் இருந்து 12 மணி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால், இரவில் கியூ காம்ப்ளக்ஸில் காத்திருக்கும் சாமானிய பக்தர்கள் காலை முதலே சுவாமியை தரிசித்து ஊர் திரும்ப வசதியாக இருக்கும்.
திருமலையில் தங்கும் அறைகளுக்காக டிக்கெட்கள் அல்லது டோக்கன்கள் திருப்பதியிலேயே வழங்க ஏற்பாடு செய்யப்படும். திருமலையில் தங்கும் அறைகள் தேவைப்படும் பக்தர்கள் திருப்பதியிலேயே டோக்கன் பெற்று கொள்ளலாம்.
திருப்பதி ஏழுமலையானுக்கு நாடு முழுவதும் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் நிலம், வீட்டு மனை போன்ற அசையா சொத்துகள் உள்ளன. அதன்படி சுவாமிக்கு மொத்தம் 960 அசையா சொத்துகள் உள்ளன. மொத்தம் 7,123 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அசையா சொத்துகளின் இன்றைய மதிப்பு ரூ.85,705 கோடியாகும்.தேவஸ்தான ஊழியர்களுக்கு ஏற்கெனவே 300 ஏக்கரில் வீட்டுமனைகள் ரூ.60 கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ளன. விரைவில் தேவஸ்தான ஊழியர்களுக்கு வீட்டு மனைகள் வழங்கப்படும் என்று ஒய்.வி.சுப்பாரெட்டி தெரிவித்தார்.