திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம்

உலகிலிருக்கும் பழமையான மலைகளுள் திருவண்ணாமலையும் ஒன்று. 2671 மீட்டர் உயரத்துடனும், 14 கி.மீ சுற்றளவுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இந்த மலை 260 கோடி ஆண்டுகள் பழமையானது என டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். மேலும், பால் பிரண்டன் எனும் ஆய்வாளார் “மெசேஜ் பிரம் அருணாச்சலா” எனும் நூலில் லெமூரியா கண்டத்தின் எஞ்சியப் பகுதியே திருவண்ணாமலை எனக் கூறியுள்ளார். ஆராய்ச்சிகள் ஒருபுறம் இருக்க, நடைமுறையிலும் இந்த மலை பலச் சிறப்புகளை உள்ளடக்கி, உலக மக்கள் அனைவரையும் […]

உலகிலிருக்கும் பழமையான மலைகளுள் திருவண்ணாமலையும் ஒன்று. 2671 மீட்டர் உயரத்துடனும், 14 கி.மீ சுற்றளவுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இந்த மலை 260 கோடி ஆண்டுகள் பழமையானது என டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். மேலும், பால் பிரண்டன் எனும் ஆய்வாளார் “மெசேஜ் பிரம் அருணாச்சலா” எனும் நூலில் லெமூரியா கண்டத்தின் எஞ்சியப் பகுதியே திருவண்ணாமலை எனக் கூறியுள்ளார். ஆராய்ச்சிகள் ஒருபுறம் இருக்க, நடைமுறையிலும் இந்த மலை பலச் சிறப்புகளை உள்ளடக்கி, உலக மக்கள் அனைவரையும் ஈர்க்கும் மலையாக உள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் அமைந்ததே அருணாச்சலேஸ்வரர் ஆலயமாகும்.

அருணாச்சலேஸ்வரர் ஆலயம், 24 ஏக்கர் பரப்பளவு, 6 பிரகாரஙகள், 9 ராஜகோபுரங்கள் ஆகிவற்றைக் கொண்டு தமிழகத்தின் பெரிய கோவில்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. மேலும், இந்தக் கோவிலின் கோபுரம் 217 அடி உயரம் கொண்டு, தமிழகத்தின் இரண்டாவது பெரிய கோபுரமாக விளங்குகிறது. மேலும், 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 43 செப்புச் சிலைகள், ஆயிரக்கணக்கானச் சிற்பங்கள், சுமார் 450 கல்வெட்டுகள் ஆகியவைக் கொண்டு ஒரு அதிசயக் கலைக்கூடமாக இந்த ஆலயம் இருக்கிறது.

கோவில்களில் கிடைத்துள்ள கல்வெட்டுகளின்படி, சுமார் 1000 ஆண்டுகளாக இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ள வரலாற்றை அறியமுடிகிறது. இந்தக் கோவில், முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில், மகிழ மரத்தடியில், சிறு மண்சுவர் கோவிலாக இருந்து, 4-ம் நூற்றாண்டில், பல்லவர் காலத்தில், செங்கல்லால் கருவறை எழுப்பப்பட்டு, 5-ம் நூற்றாண்டில் சிறு ஆலயமாக மேம்பட்டது. 817-ம் ஆண்டு, முதலாம் ஆதித்ய சோழன், செங்கல் கருவறையை அகற்றி, கருங்கல்லாலானக் கருவறையைக் கட்டினார். 10-ம் நூற்றாண்டில் கருவறையைச் சுற்றி முதல் மற்றும் இரண்டாம் பிரகாரங்கள் கட்டப்பட்டன. மதில்களில் முதலாம் ராஜேந்திரன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜராஜ கோப்பெருஞ்சிங்கன் ஆகியோரது சாசனங்கள் காணப்படுவதே இதற்குச் சான்றாகும்.

11-ம் நூற்றாண்டில் முதலாம் ராஜேந்திரச் சோழன் கொடிமர ரிஷி கோபுரத்தையும் சுற்றுச் சுவர்களையும் கட்டினான். 1063-ம் ஆண்டு வீரராஜேந்திர சோழனால் கிளிக்கோபுரம் கட்டப்பட்டது. 12-ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கச் சோழர் உண்ணாமலை அம்மனுக்கு தனி சன்னதி கட்டினார். சோழ மன்னரிடம் குறுநில மன்னராக இருந்த பல்லவராஜா, கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் மூலம் 13-ம் நூற்றாண்டில் சிறு, சிறு சன்னதிகள் உருவானது. கி.பி. 14ம் நூற்றாண்டில் ஒய்சளர்களுடைய துணைத் தலைநகராகத் திருவண்ணாமலை விளங்கிய போது, 1340-ம் ஆண்டு முதல் 1374-ம் ஆண்டுக்குள், ஹொய்சாள மன்னர் வீரவல்லாளனால் வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் கோபுரங்கள் கட்டப்பட்டன. விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் அண்ணாமலையார் கோவிலின் கிழக்குக் கோபுரத்தைக் கி.பி. 1516இல் கட்ட ஆரம்பித்தார். 1529-ல் கிருஷ்ண தேவராயரின் ஆட்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, தஞ்சை மன்னர் செவ்வப்ப நாயக்கர், கிழக்கு ராஜகோபுரத்தை 1590-ல் கட்டி முடித்தார். இதற்கிடையே குறுநில மன்னர்களும், சிவனடியார்களும் கோவிலின் சிறியக் கோபுரங்களைக் கட்டினார்கள். இவ்வாறு, கோபுரங்கள் அனைத்தும் 1370-ல் கட்டத் தொடங்கப்பட்டு 1590-ம் ஆண்டில் முடிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம், 1000 ஆண்டு கால கட்டடப் பாரம்பரியத்தை இந்தக் கோவிலில் காணலாம்.

உலகின் வெறெந்தக் கோவில்களிலும் இல்லாத, இந்தக் கோவிலில் மட்டுமே காணக்கூடிய மரபுகளும், சிறப்புகளும் நிரம்ப உள்ளன. அவற்றுள் சில:

1. சித்தர்கள் :

அக்காலம் தொட்டு இக்காலம் வரை, பல சித்தர்கள் மற்றும் ஞானிகளின் இருப்பிடமாகத் திருவண்ணாமலை விளங்குகிறது. இந்த மலையிலும், மலையை ஒட்டிய காட்டுப்பகுதிகளிலும் இன்றும் பல்வேறு சித்தர்கள் பல்வேறு வடிவங்களில் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. மேலும், 18 சித்தர்களில் ஒருவரான ‘இடைக்காடர்’ சமாதி அடைந்ததும் திருவண்ணாமலையே ஆகும். மேலும், ரமண மகரிஷி, சேஷாத்ரி ஸ்வாமிகள் போன்று எண்ணற்ற சித்தர்களின் சமாதிகள் இந்த மலைச் சுற்றி அமைந்துள்ளன. திருப்புகழ் இயற்றிய அருணகிரியார் வாழ்ந்ததும் இங்குதான். இவ்வாறு, அனைவரையும் ஈர்க்கும் இந்த அற்புத மலை “காந்த மலை” என்று அழைக்கப்படுகிறது.

2. கிரிவலம் :

இந்த மலையின் இயற்கையான புவியியல் அமைப்பு மற்றும் அதன் மூலிகைகளின் தனித்தன்மை ஆகியன பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறியப்பட்டது. எனவே, மலைச் சுற்றி வரும் ‘கிரிவலம்’ என்ற வழக்கம் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே உண்டானது. அதை உறுதி செய்யும் விதத்தில், 800 ஆண்டுகளுக்கு முன்னரே, “கிபி 1240ல் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல, ஜடாவர்ம விக்ரம பாண்டியன் பாதை அமைத்துப் பணி செய்தார்” என்ற கல்வெட்டுச் சான்று கிடைத்துள்ளது. கிழக்கிலிருந்து, இடம்வலமாக மலையைச் சுற்றும் கிரிவலத்தில், இந்த மலையின் தனித்துவத்தை அறியலாம். அதாவது, இந்த மலையின் அமைப்பு, கிழக்கு திசையிலிருந்துப் பார்த்தால், ஒன்றாகத் தெரியும். மலையைச் சுற்றும் வழியில், தெற்கில், இரண்டாகத் தெரியும். மேற்குத் திசையிலிருந்து பார்த்தால் மூன்றாகத் தெரியும். இறுதியில், வடகிழக்கில் ஐந்து முகங்களுடன் காணப்படும். இது வேறெங்கும் காண முடியாத அமைப்பாகும்.

3. கார்த்திகை தீபத் திருவிழா :

உலகின் பிரசித்திப் பெற்ற சமயம் சார்ந்த திருவிழாக்களில், “திருவண்ணாமலைக் கார்திகைத் தீபத் திருவிழா” முதன்மையானதாகும். கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று மலை மீது ஏற்றும் தீபம், மகா தீபமாகும். தொடர்ந்து 11 நாட்கள் இந்த மகா தீபம் மலை மீது ஒளிரும். லட்சக் கணக்கில் உலகெங்கிலும் இருந்து மக்கள் கூடி இந்த விழாவைக் கொண்டாடுவது, இதைத் தமிழகத்தின் முக்கிய விழாவாகக் கருதச் செய்கிறது. மகா தீபம் ஏற்ற 3000 கிலோ பசு நெய், 7 அடி உயரம் கொண்ட செப்புக் கொப்பரை, திரியாக பயன்படுத்த சுமார் 1000 மீட்டர் காடாத்துணி மற்றும் 2 கிலோ கற்பூரம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய விழா உலகின் வெறெந்தப் பகுதியிலும் இல்லை என்பதே இதன் தனிச் சிறப்பாகும்.

4. சிற்பங்களும் ஓவியங்களும்:

1000 ஆண்டுகளாகக் கட்டப்பட்டதால், பல்வேறு காலகட்டங்களின் கலைவடிவங்களை இந்தக் கோவிலில் நாம் காணலாம்.

  • விஜயநகரக் கட்டடக் கலைக்கும் சிற்பக் கலைக்கும் ஒரு எடுத்துக் காட்டாக ஆயிரங்கால் மண்டபம் விளங்குகிறது.
  • இராய கோபுரத்தின் மேல் முகட்டில், இயற்கையான மூலிகை வண்ணங்கள் கொண்டு தீட்டப்பட்ட அழகிய ஓவியங்கள் உள்ளன. இவற்றுள் ஒன்று யானையை வேட்டையாடி அடக்கி வருவதுபோல் உள்ள ஓவியமாகும். விஜயநகர வேந்தரின் மெய்க்கீர்த்தியில் கூறப்பட்ட நிகழ்வை இந்த ஓவியங்கள் விளக்குவதாக அமைந்து, விஜயநகர அரசின் வரலாற்றைக் காட்டும் கண்ணாடியாக இருக்கின்றன.
  • கிழக்கு கோபுரத்தில் பரத சாஸ்திரத்தில் உள்ள தாண்டவ லட்சணம் எனும் நாட்டிய நிலைகள் 108-யும் விளக்கும் சிற்பங்கள் உள்ளன. இவை விஜயநகரம் மற்றும் நாயக்கர் கால சிற்பக்கலையின் சிகரமாகத் திகழ்கின்றன.
  • 64 சிவ மூர்த்தங்களுள் ஒன்றான ஜ்வரபக்ன மூர்த்தி, வளைகாப்பு மண்டபத்தின் மேடையின் வடகிழக்குத் தூணிண் அடிப்பகுதியில் காணப்படுகிறது. சுசீந்திரம், சாட்டியாங்குடி, ஈரோடு பவானி சங்கமேசுவரர் கோயில், திருவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி கோயில் போன்ற குறிப்பிட்ட சில கோவில்களில் மட்டுமே காணப்படும் இந்த வடிவம் 3 முகங்களும், 3 கைகளும் 3 கால்களும் கொண்டு தமிழர்களின் சிற்பக் கலைத் திறனை எடுத்துரைக்கிறது.
  • இந்தக் கோவிலின் மற்றொரு வியத்தகு சிற்பமாக இருப்பது மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி குகையின் துர்க்கை சுவர்சிற்பத்தைத் தழுவி அமைந்த சிற்பமாகும். இரண்டு சிற்பங்களுக்கும் இடையில் 9 நூற்றாண்டுகள் கால இடைவெளி இருந்தும், சிற்பங்களின் உருவ ஒற்றுமை அறிஞர்களால் வியப்பானதாகப் பார்க்கப்படுகிறது. யானையின் தலையை சிம்மம் முன்னிரு கால்களாலும், அதன் முதுகை இடது பின்னங்காலாலும் பிடித்திருக்கிறது. சிம்மத்தின் மீது அமர்ந்துள்ள துர்க்கை பின்னிரு கரங்களில் சங்கும், சக்கரமும் ஏந்தி, முன் இடது கை வில்லைப் பிடித்திருக்க, முன் வலது கை பின் நோக்கி வளைந்து அம்பராத்தூணியிலிந்து அம்பை எடுக்கும் வகையிலான இந்தச் சிற்பம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இவ்வாறு எண்ணற்ற சிறப்புகளை உள்ளடக்கிய திருவண்ணாமலை, தமிழகத்தில், வெளிநாட்டினரை அதிகமாகக் கவரும் இடங்களில் முதன்மையானதாகத் திகழ்வதில் வியப்பில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu