தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக அனைத்து பகுதிகளும் வெள்ளகாடாக காட்சியளித்தது. மேலும் பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. தற்போது இங்கு மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் போக்குவரத்து மெல்ல மெல்ல சீராகி வருகின்றன. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள 9 பள்ளிகளுக்கு விடுமுறை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்து வருவதால் அங்கு சூழ்நிலைகளை பொறுத்து பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம் என நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.