நெடுநல்வாடை

பாண்டிய மன்னன் ஆரியப்படைக் கடந்த நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல். சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான நெடுநல்வாடையைச் 'சிற்பப்பாட்டு' என்று அறிஞர்கள் அழைக்கின்றனர். அந்த அளவிற்கு சிற்பங்கள், ஓவியங்கள், அரண்மனையின் அழகு ஆகியவைப் பற்றியத் தகவல்கள் அந்த நூலில் இடம்பெறுகின்றன. தமிழர்களின் கட்டடக் கலையில் சிற்பங்களும் ஓவியங்களும் பிரிக்க முடியாத வகையில் சேர்ந்தே இருப்பனவாகும். கட்டடங்களின் அழகியலை இந்த இருக் […]

பாண்டிய மன்னன் ஆரியப்படைக் கடந்த நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல். சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான நெடுநல்வாடையைச் 'சிற்பப்பாட்டு' என்று அறிஞர்கள் அழைக்கின்றனர். அந்த அளவிற்கு சிற்பங்கள், ஓவியங்கள், அரண்மனையின் அழகு ஆகியவைப் பற்றியத் தகவல்கள் அந்த நூலில் இடம்பெறுகின்றன. தமிழர்களின் கட்டடக் கலையில் சிற்பங்களும் ஓவியங்களும் பிரிக்க முடியாத வகையில் சேர்ந்தே இருப்பனவாகும். கட்டடங்களின் அழகியலை இந்த இருக் கலைகளும் பன்மடங்கு உயர்த்திக் காட்டுவனவாகும். அவ்வாறான அழகியலை 'சிற்பப்பாட்டு' - நெடுநல்வாடை வழியாகக் காணலாம்.

புலவர் நக்கீரர், அரண்மனைக் கட்டப்பட்ட முறையை, அது கால்கோள் செய்யப்பட்ட நாள் முதல் விரிவாக எடுத்துரைக்கிறார். அரண்மனை வாயில், முற்றம், அந்தப்புரத்தின் அமைப்பு, அரசி படுத்திருக்கும் வட்டக் கட்டில், அதன் விதானம், படுக்கையின் அமைப்பு யாவும் சிற்ப உத்தித் திறனோடு புனையப்பட்டுள்ளன என்பதைப் பாடல்களில் பதிவு செய்கிறார். கட்டிற்காலில் உருண்டு திரண்டிருக்கும் குடம் போன்ற உறுப்பைத் ‘தூங்கு இயல் மகளிர் வீங்குமுலை கடுப்பப் புடைதிரண் டிருந்த குடத்த” என்று நுட்பமாக விளக்குகிறார். மேலும் அந்தப்புர வாயிலில் பதுமைகள் இருந்ததையும், அவற்றில் விளக்குகள் ஏற்றி வைக்கப் பட்டதையும் மிக அழகாக விவரிக்கிறார். வாசல் நிலையில் குவளை மலரேந்திய யானைகளுக்கு நடுவில் திருமகள் உருவம் செதுக்கப்பட்டுள்ளது என்பதும், நீரூற்றும் சிங்கங்கள் அரசரின் நிலாமுற்றத்தில் இருந்தது என்பதும் வியக்கத் தக்கதாக உள்ளது. இவற்றைப் பிற்கால கோவிலமைப்புகளில் காணமுடியும். எனவே, இவை நிச்சயம் கற்பனை மட்டுமல்ல. தமிழர் கோவில்களில் சாத்தியமான ஒன்றே ஆகும்.

'மனைநூல்' இலக்கணக் கூறுபாடுகளை நெடுநல்வாடைக் காலத்திலும் தமிழர்கள் கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக

"மாதிரம் விரிகதிர்
பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்பு
ஒருதிறஞ்சாரா வரைநாள் அமயத்து"

என்றப் பாடல் திகழ்கிறது. தலைவி தங்கியிருக்கும் இல்லம் உள்ள அரண்மனையை நாள் செய்து தொடங்கியது இதன் மூலம் தெளிவாகிறது. மேலும் நாள், கோள்களின் நிலை பார்த்து நல்ல வேளையிலே கட்டடம் தொடங்கும் மரபையும் அம்மரபின் பழமையையும் அறிய முடிகிறது. தற்காலத்தில் பின்பற்றப்படும் மனை சார்ந்த வழக்கங்கள் ஏற்கனவே பழந்தமிழர் வாழ்வில் பின்பற்றப்பட்டு வந்தவையே என்பதை நெடுநல்வாடை உறுதி செய்கின்றது.

மேலும், இப்போது வழக்கிலுள்ள 'மனையடி சாத்திரத்தில்' மனைக் கோலுவதற்கு மிகச் சிறந்த மாதமாகச் சித்திரைக் கூறப்பட்டுள்ளது. நெடுநல்வாடையும் இந்தக் கருத்தை உறுதி செய்கிறது. மேலும் சிற்பக்கலை வல்லுனர்கள் 'நூல் கொண்டு சுவரில் அளவறிந்தனர்' எனும் செய்தியை நெடுநல்வாடை பதிவு செய்கிறது. இத்தொழில் செய்யும் கலைஞர்களை ‘கண்ணுள் வினைஞர் கண்ணாளர்’ என்று கூறுகிறது. அதில் கூறப்பட்டதைப் போலவே நூலைப்பிடித்து அளவும் திசையும் பார்க்கும் வழக்கம் கொத்தனார்களிடையே இன்றும் நிலவி வருகிறது.

இன்றையப் பொறியியல் வல்லுநர்கள் போல் அன்றும் கட்டடக்கலைத் திறன் வல்ல 'நூலறி புலவர்' இருந்தனர் என்பதற்கும், கட்டடக்கலை நூல்கள் சிலவும் இருந்தது என்பதற்கும் நெடுநல்வாடையில் சான்றுகள் கிடைக்கின்றன.

இவ்வாறு தமிழர்களின் பழங்கால கட்டடக் கலைகளைப் பற்றியக் கருவூலமாக நெடுநல்வாடை திகழ்கிறது. இதனைக் கற்பனையான வர்ணனை என்று மட்டும் கடந்து விட முடியாத அளவிற்கு, பண்டையக் காலத்தில் ஓவியக்கலையும் சிற்பக் கலையும் சிறந்து விளங்கியது சான்றகளோடு நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நூல் மூலமாகத் தமிழர்களின் கட்டடக் கலை நயம் உலகிற்கு முன்னோடியாக இருந்துள்ளது என்பது தெளிவாகிறது.

2
1
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu