தென்கொரியாவில் சுமார் 1600 மருத்துவர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தென்கொரியாவில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் டாக்டர்கள் உள்ளனர். மக்கள் தொகையின்படி 10 ஆயிரம் பேருக்கு 25 டாக்டர்கள் என்ற நிலை இருக்கிறது. எனவே மருத்துவர்களின் பற்றாக்குறையை தீர்க்க அரசு புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்தது. அதன்படி வரும் கல்வி ஆண்டு முதல் 2000 மருத்துவ மாணவர்கள் அதிகமாக சேர்க்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பால் தற்போதைய மருத்துவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள் இந்த கொள்கையை எதிர்த்து போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் இது குறித்து கூறுகையில், 2000 மாணவர்களை கையாளக்கூடிய அளவில் போதுமான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் எதுவும் வடகொரியாவில் இல்லை. மேலும் அளவுக்கு அதிகமான மருத்துவர்களை பணியமர்த்தும் போது தேவையற்ற சிகிச்சை முறை மேற்கொள்ளப்படும் என்றும் தற்போதைய மருத்துவர்கள் வருமானம் குறையும் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர். எனவே அவர்கள் சாலையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக 1200க்கும் அதிகமான பயிற்சி மருத்துவர்கள் ஒரே நாளில் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் உரிய சிகிச்சை கிடைக்காமல் தவிக்கின்றனர். இந்த போராட்டத்தை மருத்துவர்கள் உடனடியாக கைவிட வேண்டும் என்று தென் கொரிய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.