விண்வெளி குறித்த ஆராய்ச்சியில், சூரிய குடும்பத்தின் தோற்றம், கோள்களின் தோற்றம் போன்றவற்றை அறிவது மிக முக்கியமாக கருதப்படுகிறது. அந்த வகையில், நிலவு எவ்வாறு உருவாகி இருக்கும் என்பது குறித்து, தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், துர்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், புதிய முறையில் நிலவின் உருவாக்கம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதன்படி, நிலவின் முழுமையான உருவாக்கம் சில மணி நேரங்களில் நிகழ்ந்து முடிந்து விட்டதாக சொல்லப்பட்டுள்ளது. இதுநாள் வரை, நிலவின் உருவாக்கத்திற்கு பல நூறு ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று கருதப்பட்டு வந்த நிலையில், இந்த ஆய்வு முடிவு, நிலவைப் பற்றிய ஆராய்ச்சியில், புதிய கோணத்தை புகுத்தியுள்ளது
சிறிய அளவிலான கோள்கள், ஒன்றோடு ஒன்று மோதும் பொழுது நிலவு உருவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதனால், வெவ்வேறு மோதல் கோணங்கள், வெவ்வேறு வேகம், கோள்களின் வெவ்வேறு சுழற்சி முறை, கோள்களின் வெவ்வேறு எடை மற்றும் நிறை போன்ற பல காரணிகளின் அடிப்படையில், கணினியின் துணைகொண்டு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. மேற்குறிப்பிட்ட காரணிகளின் வெவ்வேறு சேர்க்கையில் உண்டான மோதல் விளைவுகள், சூப்பர் கணினி வழியாக ஆராயப்பட்டன. அதன்படி, பூமி மற்றும் செவ்வாய் கிரகம் அளவிலான, தியியா என்ற திடப்பொருளின் மோதல் விளைவால், நிலவு உருவாகி இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆய்வின் மூலம், நிலவின் நிறை, எடை மற்றும் இரும்பு போன்ற தாது பொருட்களை உள்ளடக்கிய பெரிய அளவிலான மோதல் விளைவு, ஒரு செயற்கைக்கோளை பூமியின் ரோச் எல்லைக்கு வெளியே உடனடியாக நிலை நிறுத்த வல்லது என்று கண்டறியப்பட்டுள்ளது. பூமியின் ரோச் எல்லையை கடந்த பின்னர், சில செயற்கைக்கோள்கள் இவ்வாறு நிலையான சுற்றுவட்ட பாதையில் பயணம் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இதன் அடிப்படையில், நிலவும், பெரிய அளவிலான மோதல் விளைவால், சில மணி நேரங்களில் ரோச் எல்லையைக் கடந்து பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த ஆய்வின் மூலம், நிலவை குறித்து அறிந்து கொள்வதை விட, நமது பூமி எந்த காலகட்டத்தில், வாழத் தகுந்த கோளாக மாறியது என்பது குறித்து அறிய முடியும்” என்று நாசா தெரிவித்துள்ளது. இந்நிலையில், நிலவுக்கு மனிதர்களை அனுப்பி ஆராயும் திட்டத்தில் நாசா ஈடுபட்டு வருகிறது. அத்துடன், சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள், நிலவுக்கு விண்கலங்களை அனுப்பி, தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதன் வரிசையில், இந்த ஆய்வு முடிவு, மற்றொரு புதிய கோணத்தில், நிலவு குறித்த ஆராய்ச்சியை இட்டுச் செல்கிறது.