அவசர காலங்களில் மருத்துவமனை வசதி இல்லாத இடங்களில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களுக்கு உதவும் வகையில், சிறிய மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. பீஷ்ம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருத்துவமனை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எளிதில் கொண்டு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 720 கிலோகிராம் எடை கொண்ட இந்த மருத்துவமனையை இந்திய விமானப்படையின் பாராசூட் மூலம் தரையிறக்கும் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மருத்துவமனையின் தரையிறக்க பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 1500 அடி உயரத்தில் இருந்து பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பாராசூட் உதவியுடன் பீஷ்ம் மருத்துவமனை தரையிறக்கப்பட்டது. இந்திய விமானப்படையின் சி130 விமானங்கள் மருத்துவமனையை சுமந்து செல்ல செல்ல பயன்படுத்தப்பட்டன. தரையிறக்க பரிசோதனையின் போது மருத்துவமனைக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் கிட்டத்தட்ட 200 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும். அவசர கால சிகிச்சைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் இந்த மருத்துவமனையில் உள்ளது.