சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் வரும் 2030 ஆம் ஆண்டுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், அதன் சுற்றுவட்ட பாதையை குறைத்து மீண்டும் பூமிக்குள் விழச் செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆர்டரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வென்றுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தை அகற்றுவதற்கான ஆர்டர் மதிப்பு 843 மில்லியன் டாலர்கள் அளவில் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுவட்ட பாதையை குறைக்கும் பிரத்தியேக விண்கலத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரிக்கும். அதன் மூலமாக, பாதுகாப்பான முறையில் சர்வதேச விண்வெளி நிலையம் பசிபிக் பெருங்கடலில் விழச் செய்யப்படும். சர்வதேச விண்வெளி நிலையத்தின் பாகங்களை 3 கட்டங்களாக விழச் செய்வதற்கு நாசா திட்டமிட்டுள்ளது. முதலில், அதன் சூரிய தகடுகள் மற்றும் ரேடியாட்டார்கள் விழும்; அதன் பிறகு விண்வெளி நிலையத்தின் தனித்தனி பகுதிகள் உடைந்து விடும். இறுதியாக, முதுகுத்தண்டு போன்ற பகுதி விழும். பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும் போது, பெரும்பாலான பகுதிகள் எரிந்தாலும், பெரிய அளவில் இருக்கும் பாகங்கள் தரைப்பகுதியை வந்தடையும் என நாசா தெரிவித்துள்ளது.