அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. திங்கட்கிழமை அன்று, பள்ளி ஒன்றில், துப்பாக்கி சூடு நிகழ்ந்துள்ளது. இந்த ஆண்டில் நடைபெறும் 40 வது துப்பாக்கி சூடு சம்பவமாக இது பதிவாகியுள்ளது. ஒரே ஆண்டில் அதிக முறை துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்காவின் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டில், மூன்று பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள தூய லூயி மேல்நிலைப் பள்ளிக்கு அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் வந்துள்ளார். சுமார் 20 வயது மதிக்கத்தக்க அவர், “அனைவரும் சிறிது நேரத்தில் இறக்கப் போகிறீர்கள்!” என்று கூச்சிலிட்டுக் கொண்டே வந்ததாகவும் கூறப்படுகிறது. அவரால் சுடப்பட்டு பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மற்றும் ஒரு பதின் பருவ மாணவி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் பள்ளிக்குள் வந்தது குறித்து உரிய நேரத்தில் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர் அந்த நபரை சுட்டுக் கொன்றனர். இந்த பள்ளி வளாகத்தில் இரண்டு கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. எனவே, இங்கு பல்வேறு நுழைவு வாயில்கள் உள்ளன. அனைத்திலும் பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். அதில் ஒரு பாதுகாவலர், நீளமான துப்பாக்கியை ஏந்தியபடி ஒரு நபர் வளாகத்திற்குள் நுழைவதை அதிகாரிகளுக்கு உடனடியாக தெரியப்படுத்தினார். அவரது துரித நடவடிக்கையால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில், உயிரிழந்தோர் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், பள்ளியின் பதிவு அறிக்கை படி, இறந்த ஆசிரியர் ‘ஜேன் கு சா’ என்று தெரியவந்துள்ளது. அவரது மகள் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். மேலும், பள்ளியின் ஆசிரியர்கள் இருவர், நூல் இழையில் துப்பாக்கிச் சூட்டில் இருந்து உயிர் தப்பி உள்ளனர். மேலும், இந்த சம்பவத்தை நேரில் கண்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இது குறித்த தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
பள்ளி மாணவி ஒருவர், தன்னை நோக்கி சுடும் பொழுது துப்பாக்கியில் குண்டு சிக்கிக் கொண்டதால் தான் உயிர் பிழைத்ததாக தெரிவித்தார். பள்ளியின் ஆசிரியர் ஒருவர், “துப்பாக்கி ஏந்திய நபர் என் வகுப்பிற்குள் நுழைந்தார். ஆனால், அங்கிருந்து என்னையும் மாணவர்களையும் துப்பாக்கி முனையில் வெளியேற அனுமதித்தார். யாரையும் சுடவில்லை. அதற்கான காரணம் தெரியவில்லை” என்று கூறினார். காவல்துறை அதிகாரி மைக்கேல் ஜாக் இது குறித்து கூறும் போது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என்றும், இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.